ஒவ்வொரு அணுவிலும்
ஊறிக் கிடக்கும் மகத்துவம்
எதற்கும் ஈடாகா
வாழ்க்கையின் வெற்றி ரகசியம்
கருவறையிலிருந்து கல்லறை
வரை கலந்துவிட்ட அற்புதம்
விலைக் கொடுத்தும்
வாங்க முடியா விலை மதிப்பில்லா
மாணிக்கம்....
அறிவொன்றும் செல்லாது
உழைப்பின்றி வெல்லாது
அன்பொன்றும் பிறக்காது
உழைப்பின்றி சிறக்காது
உழைப்பே உயர்வு தரும்
அது நேர்மையால் வரும்
உழைப்பின்றி வேறேது தவம்
உழைப்பில்லா உடல் கூட சவம்
ஊதியத்தின் தாய் உழைப்பு
இல்லையேல் ஏது பிழைப்பு
உடலுழைப்பு, அன்புழைப்பு,
அறிவுழைப்பு மூன்றும் சேர்ந்த
முத்தமிழ் தான் வெற்றி உழைப்பு
எது தவம் ?
அன்பா? அறிவா? உழைப்பா?
உழைப்பே பெரும் தவம்
கண்விழித்து படித்தாலும்
ஓவியங்கள் வரைந்தாலும்
மூட்டைகள் சுமந்தாலும்
சிற்பங்கள் செதுக்கினாலும்
உழைப்பே மூலதனம்
உழைப்பின்றி ஊதியமில்லை
இது பழமொழி
உழைப்பின்றி உயிரே இல்லை
இது புது மொழி
உடலுக்கு உணவு
உணவிற்கு உழைப்பு
தானாகி விடும்
அன்போடு அறிவு
உழைப்பின்றி வேறேது தவம்
உழைப்பில்லா உடல் கூட சவம்
தவமிருந்து பெறக்கூடிய
உன்னதம் தான் உழைப்பு
உடலுக்கும் உழைப்பு
மனதிற்கும் உழைப்பு
மானிடத்தின் சிறப்பு
மாற்றங்கள் வந்தாலும்
ஏற்றங்கள் காணும்
இனிமை தான் உழைப்பு
இம்சைகளை துவம்சம் செய்யும்
இளமையின் முனைப்பு
அது தான் உழைப்பு
காலங்கள் சென்றாலும்
வேதங்கள் வென்றாலும்
உயர்ந்தோர் மனதிலே
உயர்ந்த செல்வம் உழைப்பு
உழைப்பின்றி ஊதியம் இல்லை
உழைப்பின்றி முன்னேற்றம் இல்லை
உழைப்பின்றி இன்பம் இல்லை
உழைப்பின்றி பாசம் இல்லை
உழைப்பின்றி அறிவு இல்லை
உழைப்பின்றி தெளிவு இல்லை
உழைப்பே உன்னதம்
உழைப்பே பொற்பதம்
உழைப்போர்கள் யாவர்க்கும்
உலகம் சிறிது
அன்புக்கும் அறிவுக்கும்
உழைப்பே பெரிது.
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment